சிவகங்கை:முதுகலை ஆசிரியர்களை, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்துவதால், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் பாதிக்கும் என கருத்து நிலவுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான இரண்டாம் கட்ட பணி பிப்., 9 முதல் 28 ம் தேதி வரை நடக்கிறது. இதில், ஆசிரியர், வருவாய் துறை ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். பயிற்சி வகுப்பு வரும் 27 முதல் ஜன., 28 வரை நடக்கிறது.மார்ச் 2 ம் தேதி, பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது; ஜனவரியில் திருப்புதல், பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறை தேர்வு நடக்கும்; இதற்காக, மாணவர்களை தயார்படுத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாதிப்பு:ஆனால் மொத்தம் உள்ள 24 ஆயிரம் முதுகலை ஆசிரியர்களில், 15 ஆயிரம் பேர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடவுள்ளனர். இதனால் மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பணிக்கு இடையே அறிவியல் ஆசிரியர்கள், செய்முறை தேர்விற்கான கண்காணிப்புக்கும் செல்ல வேண்டும். இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விடுவிக்க வலியுறுத்தியுள்ளனர்.முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகன், மாவட்ட தலைவர் உதயசங்கர், செயலாளர் முனியாண்டி கூறுகையில், "சங்கம் சார்பில் அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்துவிட்டோம். எங்களுக்கு பதில், இடைநிலை ஆசிரியர்களை ஈடுபடுத்தலாம். கணக்கெடுப்பு பணிக்கு சென்றால், மாநில அளவில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் கடுமையாக பாதிக்கும். அரசு இதை பரிசீலிக்க வேண்டும்,' என்றார்.
No comments:
Post a Comment